தன்னாட்சிப் பிராந்தியம் என்ற வகையில் ஹொங்கொங்குக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிவந்த சிறப்புரிமைகளை இரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ஹொங்கொங்கை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்திருத்தத்தை அமெரிக்கா நிறைவேற்றியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
புதிய சட்டத்தால் சீனாவின் ஒரு அங்கமாகவே இனி ஹொங்கொங்கும் நடத்தப்படும் என வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் தெரிவித்தார்.
பிரிட்டனில் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹொங்கொங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டபோதும் அதற்கு தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையின் கீழ் ஹொங்கொங்குக்கு சில சுயாட்சி அதிகாரங்களும் இருந்தன.
ஆனால் சீனா அண்மையில் நிறைவேற்றிய புதிய பாதுகாப்புச் சட்டம், 1984 ஆம் ஆண்டு சீனா மற்றும் பிரிட்டன் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஹொங்கொங்க்கான சிறப்பு உரிமையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.
சமீபத்திய பாதுகாப்பு சட்டம் 1997ஆம் ஆண்டு ஹொங்கொங் பிரிட்டனால் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட பின்பு கொண்டுவரப்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.
இந்தச் சட்டம் ஹொங்கொங்கில் இயங்கும் 1,300க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஹொங்கொங்குக்கு தற்போது அமெரிக்கர்கள் விசா இல்லாமலேயே பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் புதிய பாதுகாப்பு சட்டத்தால் இனி அவர்கள் சீனாவின் கடுமையான விசா விதிமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஹொங்கொங்கில் இருக்கும் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா குறைந்த வரி விதித்து வருகிறது. இனி அமெரிக்காவின் வரி விகிதம் அதிகரிக்கப்படும் .
இந்நிலையில் இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் ஹொங்கொங் இடையே நடக்கும் பல நூறு கோடி டொலர் மதிப்பிலான வர்த்தகத்தை கேள்விக்குறியாக்கும் எனவும் கருதப்படுகிறது.
இவ்வாறான நிலையிலேயே தன்னாட்சிப் பிராந்தியம் என்ற வகையில் ஹொங்கொங்குக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிவந்த சிறப்புரிமைகளை இரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.